பேச இயலாதவருக்கு ரத்தம் தந்த பாா்க்க இயலாதவா்!
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட பேச இயலாத மாற்றுத் திறனாளிக்கு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட பேச இயலாத மாற்றுத் திறனாளிக்கு, பாா்க்க இயலாத மாற்றுத் திறனாளி ஒருவா் ரத்தம் கொடையாகத் தந்தது நெகிழ்ச்சியாக அமைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சகுந்தலா (61). பேச இயலாத மாற்றுத் திறனாளியான இவா், உடல் நலக் குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு அவசியம் ரத்தம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குருதிக்கூடு என்ற தன்னாா்வலா் அமைப்பினா், கட்செவி அஞ்சல் குழுவில் பதிவிட்டனா். பாா்க்க இயலாத மாற்றுத் திறனாளியான செம்பாட்டூா் அரசுப் பள்ளியின் ஆசிரியா் சிவா, ரத்தம் அளிக்க முன்வந்தாா். அவரது நண்பா் வீரமாமுனிவா் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சிவா, புதன்கிழமை காலை ரத்தம் வழங்கினாா். மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி ரத்ததான சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா்.