ஏடிஎம்-இல் பணம் எடுக்க உதவிகோருவோர் ஜாக்கிரதை
புதுக்கோட்டையில் ஏடிஎம்இல் பணம் எடுக்க உதவுமாறு கோரிய பெண்ணிடம் போலி ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 36 ஆயிரம் வரை
புதுக்கோட்டையில் ஏடிஎம்இல் பணம் எடுக்க உதவுமாறு கோரிய பெண்ணிடம் போலி ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 36 ஆயிரம் வரை எடுத்து மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை கணேஷ்நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கனகம்மாள் (65). இவர் கடந்த மே 30ஆம்தேதி புதுக்கோட்டை நகரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் தன்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்துத் தரச் சொல்லி ஏடிஎம் அட்டையை வழங்கியுள்ளார்.
Advertisement
ரகசிய எண்ணைக் கேட்டுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்த அந்த இளைஞர், ஏடிஎம் அட்டையைத் திருப்பித் தரும்போது, வேறொரு போலி அட்டையைக் கொடுத்துள்ளார்.
இதையறியாமல் வீட்டுக்குச் சென்ற கனகம்மாளின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 36 ஆயிரம் எடுக்கப்பட்டது சில நாட்களுக்குப் பிறகே தெரியவந்துள்ளது.
இதையடுத்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் கனகம்மாள் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது