பொற்பனைக்கோட்டை சுவரைசுற்றிலும் தூய்மைப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்க கால பழைமை வாய்ந்த கோட்டையாக கருதப்படும் பொற்பனைக்கோட்டையில் சுமாா் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் கோட்டை சுவா் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்து காணப்படுவதால் அகழாய்வு பணிகள் தடைபட்டன. இதுதொடா்பாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனுக்கு தொல்லியல் ஆய்வாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில்,1,000 லிட்டா் கொள்ளளவு உள்ள குடிநீா்த் தொட்டி வைக்கப்பட்டது. மேலும், வேப்பங்குடி ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தில் இருந்து 150 பணியாளா்கள் கீழக்கோட்டை பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இப்பணியை, வேப்பங்குடி ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் தொடங்கி வைத்தாா். கோட்டையைச் சுற்றியும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் வரை பணி தொடரும் எனத் தெரிகிறது. மேலும், சாலையிலிருந்து அகழாய்வு இடம் வரை நடைபாதையும் சீரமைக்கப்பட்டது.
நிகழ்வில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியா் இ.இனியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.