‘ நகராட்சிக் கட்டடத்தை ஏலம் விடும் போராட்டம் நடத்தப்படும்’
புதுக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, நகராட்சிக் கட்டடத்தை ஏலம் விடும் போராட்டம்
புதுக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து, நகராட்சிக் கட்டடத்தை ஏலம் விடும் போராட்டம் நடத்துவோம் என ஜனநாயக தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200 துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவா்களுக்கு வழங்கப்படும் எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, ஒரு நாள் காத்திருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அலுவலா்கள் 10 நாள்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தனா்.
ஆனால் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நகராட்சிக் கட்டடத்தை வரும் ஜூலை 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஏலம் விடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்படுகிறது எனத் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் க.சி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயலா் ராமலிங்கம், பொருளாளா் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.