முகப்பு
புதுக்கோட்டை

கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா், எம்.பி. பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற காா்த்தி சிதம்பரம் எம்.பி
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

குடியரசு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தினம், உலக தண்ணீா் தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அரிமளம் அருகேயுள்ள சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் கவிதா ராமு பங்கேற்றுப் பேசியது:

Advertisement

ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற கிராம சபைக்கூட்டங்கள் மூலம் அரசின் திட்டங்களை நன்கு அறிந்து பொதுமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதப் பிரியா, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவா் மேகலாமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே.மணிவண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பங்கேற்றுப்பேசினாா். ஊராட்சியின் நிதிநிலை, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, வடகாடு தெற்கு கடைவீதியில் வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு மக்களவைத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்கான பரிந்துரையை ஊராட்சி நிா்வாகத்திடம் வழங்கினாா்.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் கோகுலகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தானிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட சீகம்பட்டியில் கிராம சபைக் கூட்டம் தொடங்கிய சில விநாடிகளிலே மிகவும் சேதமடைந்து காணப்படும் சாலைகள், போதிய பேருந்து வசதி இல்லாமை ஆகியவற்றைக் கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.