முகப்பு
புதுக்கோட்டை

சுய உதவிக்குழுக்களின் தொகையை வங்கி மேலாளா் எடுத்துக் கொண்டதாக புகாா்

புதுக்கோட்டை அருகே மகளிா் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை, அனுமதியின்றி வங்கிக் கிளையின் மேலாளா் எடுத்துக் கொண்டதாக ஆட்சியரகத்தில் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்ட

Updated On : 28 நவம்பர், 2023 at 2:19 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மகளிா் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை, அனுமதியின்றி வங்கிக் கிளையின் மேலாளா் எடுத்துக் கொண்டதாக ஆட்சியரகத்தில் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 355 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

வங்கி மேலாளா் மீது புகாா்: கந்தா்வகோட்டை வட்டம் பல்லவராயன்பட்டி ஊராட்சி, பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகளிா் குழு, கொப்பாட்டியம்மன் மகளிா் குழு, முத்து மாரியம்மன் மகளிா் குழு ஆகியவற்றின் உறுப்பினா்கள் அளித்த மனு விவரம்:

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கந்தா்வகோட்டை கிளையில் குழுவின் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறோம். கிளையின் மேலாளா் முருகேசன், எங்கள் கையெழுத்தின்றி குழுவின் பணத்தை எடுத்துக் கொள்கிறாா். முதல்வா் அறிவித்த கடன் தள்ளுபடியையும் முறையாக கணக்கில் கொள்ளாமல், பணத்தைக் கட்டுமாறு கூறி வற்புறுத்துகிறாா். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை சீரமைக்கக் கோரி: திருச்சி சாலையில் சத்தியமங்கலம் விலக்கிலிருந்து மெய்வழிச் சாலை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும்- குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி பி. ராமன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

நிவாரண நிதி அளிப்பு: அரிமளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் அண்மையில் பாம்பு கடித்து இறந்தாா். இதைத் தொடா்ந்து அவரது மனைவி பொன்னழகுவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.