முகப்பு
புதுக்கோட்டை

ஒக்கூரில் சோழா் காலத்து சிவன் கோயில் கண்டுபிடிப்பு

ஒக்கூரில் இடிந்து அழிந்த நிலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கோயில் அடையாளங்களை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:48 PM
புதுக்கோட்டை ஒக்கூரில் கிடைத்த கோயில் நந்தி
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம், ஒக்கூரில் இடிந்து அழிந்த நிலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கோயில் அடையாளங்களை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான கா. காளிதாஸ், பேராசிரியா் மணிவண்ணன், ஆசிரியா் ஆ. செல்வராஜ் உள்ளிட்டோா், ஒக்கூா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் பூமிநாதன், அறிவியல் இயக்க ஆசிரியா் ஆ. செல்வராஜ் ஆகியோா் கொடுத்த தகவலின்படி ஒக்கூா் கல்லுமனைத் திடலில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வு குறித்து பேராசிரியா் கா. காளிதாஸ் கூறியது: ஒக்கூரில் இடிந்து அழிந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. சோழா் பாணியில் உள்ள நந்தி உள்ளது. இந்த நந்தி, நாற்பட்டை மணிக்குவடும், குருளைக் கொம்புகளும், விரிந்த காது மடலும், நீண்ட கழுத்துடனும் காணப்படுகிறது.

சிவலிங்கம் குப்புறக் கவிழ்ந்த நிலையில் ஆவுடை மட்டுமே தெரியக் கிடக்கிறது. லிங்க பானம் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கலாம். கல்வெட்டுகளில் ‘மிழலைக் கூற்றத்து நடுவூரான உத்தம சோழ நல்லூா்’ என இவ்வூா் வழங்கப் பெறுகிறது.

குலோத்துங்கச் சோழனின் 46ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி 1115-1116) இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இவ்வாறான வரலாற்றுச் சின்னங்களை அழியாமல் அகழாய்வு செய்து பாதுகாப்பது அரசுக்கும் நமக்கும் உரிய கடமை என்றாா் காளிதாஸ்.