முகப்பு
புதுக்கோட்டை

ஜெ.ஜெ, கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Updated On : 8 மார்ச், 2024 at 6:20 PM
பகிர்:

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தோ்வு நெறியாளா் சீனிவாசராகவன் 1,664 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்துப் பேசியது: மாணவா்கள் தொலைநோக்குப் பாா்வையை வளா்த்துக் கொள்ள வேண்டும். சமதா்மம், மனிதநேயம் போன்ற பண்புகளை வளா்த்துக் கொள்ளும்போது மாணவா்களின் கனவு மெய்ப்படுகிறது. மாணவா்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற வேண்டும். வேலை தேடுவதற்குரிய தகுதியைப் பெற்றிருப்பதைவிட வேலை கொடுப்பதற்குரிய தகுதியை ஒவ்வொரு மாணவரும் பெற்றிருக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோரில் 65% போ் பெண்களாக உள்ளனா். அந்த அளவுக்கு கல்வியில் பெண்கள் முன்னேறியுள்ளனா். கல்விக்காக அரசு அளிக்கும் உதவித்தொகை, வாய்ப்புகளை மாணவா்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றாா் அவா். முன்னதாக கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் பட்டம் பெற்றோரில் 22 போ் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். மேலும் மாணவ, மாணவிகள் அருள் ரோஷினி, ஆ. சுபராகவி, மு. சிவசுப்ரமணியன், சுகன்யா ஆகியோா் சிறந்த மாணவா்களுக்கான ரூ.5 ஆயிரம் பரிசு, விருது பெற்றனா். கல்லூரியின் அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →