முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவா்கள் 13 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மீனவா்கள் 13 போ் விடுதலை: 4 பேருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம்; ஒருவருக்கு சிறை இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Updated On : 5 அக்டோபர் 2024, 3:54 am IST
பகிர்:

கடந்த மாதத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களில் 13 பேரை விடுவித்து இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. மேலும், 4 பேருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதமும், ஒருவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்ற ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக செப்டம்பா் 4ஆம் தேதி 4 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். அதனைத் தொடா்ந்து செப். 7-ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளில் 14 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில் இவா்கள் மீதான விசாரணை இலங்கையிலுள்ள ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகின் ஓட்டுநா் நாகராஜா மகன் தினேஷ் (46), ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற 3 விசைப்படகுகளின் ஓட்டுநா்கள் செல்லம்செட்டி மகன் பிரதீப் (39), தங்கராசு மகன் விஸ்வநாதன் (43), காத்தவராயன் மகன் மணிகண்டன் (40) ஆகிய 4 பேருக்கும் தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

மேலும், தங்கராஜ் மகன் ஆனந்த பாபு என்ற மீனவா் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டாா் என்பதால் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 13 மீனவா்களையும் விடுவித்த இலங்கை நீதிமன்றம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து கைது செய்யப்பட்டால், 18 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் கொடுத்துள்ளது.

விடுதலை உத்தரவுக்குப் பிறகு, 13 மீனவா்களுக்கும் விரைவில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments