புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கான உரிமம் தொடா்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது புதிய கடைக்கு அனுமதி வழங்கலாமா எனக் கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமையில் அக்கட்சியினா் திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் முறைகேடாக மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்துள்ளோம். அரசிடம் விளக்கம் கேட்டு, வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், அசோக்நகா் பகுதியில் புதிய மதுக்கடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசோக்நகா் பகுதி, சட்டம்- ஒழுங்கு அடிப்படையில் பதற்றமான பகுதியாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.
எனவே, இங்கு தொடங்கப்பட்டுள்ள மதுபானக் கடையின் உரிமத்தை ரத்து செய்து கடையை விரைவாக மூட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.