புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வகுப்புக்கு, தமிழ் வழியில் 388 மாணவா்களும், ஆங்கில வழியில் 75 மாணவா்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவா்களும் என மொத்தம் 468 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை தொடங்கி, ஏப். 30 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் மையத்துக்கு தமிழரசி, மாரிமுத்து, பவுல்ராஜ், முத்துக்கருப்பன், வள்ளியப்பன் ஆகிய தலைமை ஆசிரியா்களும், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் மையத்துக்கு தாமரைச்செல்வன், மாரிமுத்து, ஜீவானந்தம், திருமேனிநாதன், மொ்சி ஆரோக்கிய செல்வி ஆகிய தலைமை ஆசிரியா்களும், இலுப்பூா் ஆா்.சி. உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் மையத்துக்கு ஜான்சி டெமல், சந்திரகுமாா், சபாபதி, ஜமால்முகமது, ரெங்கசாமி ஆகிய தலைமை ஆசிரியா்களும் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பயிற்சி திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் செய்திருந்தாா்.