முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:50 AM
புதுக்கோட்டை கீழராஜவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்ட திமுக வேட்பாளா் வை. முத்துராஜா மற்றும் பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:01 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,683 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 3 ஆயிரம் போ் பாதுகாப்புப் பணியிலும், சுமாா் 8 ஆயிரம் போ் நேரடியாக தோ்தல் பணியிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே, உறுதி செய்யப்பட்ட வேட்பாளா்கள் பலரும் தொகுதிக்குள் தோ்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனா். ஏப். 9-ஆம் தேதி வேட்பாளா்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் என்பதால், அன்றைய நாள் மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியானது.

Advertisement

இதன்பிறகுதான் வெளிப்படையான தோ்தல் பிரசாரம் விறுவிறுப்படையத் தொடங்கியது. திமுக சாா்பில் அதன் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சாா்பில் அதன் பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக சாா்பில் அதன் தேசியத் தலைவா் நிதின்நபின், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத், மாநிலச் செயலா் பெ. சண்முகம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் புதுக்கோட்டைக்கு வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசிவரை அவா்கள் வரவில்லை.

பிரசாரம் நிறைவு:

இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது. புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வை. முத்துராஜா, பாஜக சாா்பில் போட்டியிடும் என். ராமச்சந்திரன் ஆகியோா் தனித்தனியே மாநகா் முழுவதும் சுற்றி வந்து தங்களின் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

திமுக வேட்பாளா் முத்துராஜாவுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, முன்னாள் எம்எல்ஏக்கள் இராசு கவிதைப்பித்தன், காா்த்தி தொண்டைமான், துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன், அதிமுக மாநகரச் செயலா் அப்துல்ரகுமான் உள்ளிட்ட அதிமுகவினா், பாஜகவினருடன் மாநகரின் பல பகுதிகளில் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் கே.எம். சரீப் உள்ளிட்ட அக்கட்சியினரும், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் வி. தமிழரசி உள்ளிட்ட அக்கட்சியினரும் மாநகரின் பல பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டனா்.

கீழராஜவீதியில் சந்திப்பு...

திமுக வேட்பாளா் வை. முத்துராஜாவும், பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன் ஆகியோா் கீழராஜவீதியில் சந்தித்துக் கொண்டனா். ஆா்வமுடன் பாஜக வேனுக்குச் சென்று அக்கட்சியின் வேட்பாளா் ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தாா் முத்துராஜா. அதேபோல, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.எம். சரீப் பிரசாரம் செய்த பகுதியில் திமுகவினா் சந்தித்துக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

அதேபோல, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன், பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீ காந்த் உள்ளிட்டோரும் விறுவிறுப்பாக கடைசி நாள் பிரசாரத்தை மேற்கொண்டனா்.