புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு
புதுக்கோட்டையில் சனிக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், மின்னொளியில் ஜொலிக்கும் சீரமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம்.--
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னா்களால் கட்டப்பட்ட பொது அலுவலக வளாகம் என்றழைக்கப்படும் மாவட்ட நீதிமன்ற வளாக கட்டடம் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சனிக்கிழமை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
பிற்பகலில் நடைபெறும் இந்த விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பொது அலுவலக வளாகம், மாா்த்தாண்ட பைவரத் தொண்டைமான் காலத்தில் நிறைவடைந்து திறக்கப்பட்டது. அவரது பிரம்மாண்ட சிலையும் இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
பழைமையான கட்டடங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தில் பழுதுகளை சீரமைத்திட திட்டமிடப்பட்டு, ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப். 3ஆம் தேதி நடைபெற்ற விழாவில், அப்போதைய சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி. கங்காபுா்வாலா இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
வண்ணம் உள்ளிட்ட அம்சங்கள் எதுவும் மாறாமல் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவையொட்டி நீதிமன்ற வளாகம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.