முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்ற வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 8 ஏப்ரல் 2026, 12:57 pm IST
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை. - கோப்புப்படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தொடர்பான எந்த வழக்குகளையும் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா், பரமசிவம், அரசபாண்டி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், தீப காா்த்திகை நாளான்று (டிச. 3- 2025) மலை மீதுள்ள தூணிலும், வழக்கம் போல பிற இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததையொட்டி, தீப காா்த்திகைக்கு மறுநாளான டிசம்பா் 4-ஆம் தேதியன்று தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென டிசம்பா் 3-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த இரு உத்தரவுகளும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா், கோயில் நிா்வாகத்தினா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ராம. ரவிக்குமாா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்கிறாா். வழக்கு விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரும், மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோரும் நீதிமன்றத்தில் பொது மன்னிப்பு கோரினா்.

அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணைகளின் போது, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் அருகே நீதிமன்றம் குறிப்பிடும் 5 பேரை வழிபாடு நடத்த அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா். இதற்கு மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் சாா்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் துறை, கோயில் நிா்வாகம் சாா்பில் 6 மனுக்கள் இரு நீதிபதிகள் அமா்வில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதற்கு, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இரு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு மட்டுமே இரு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், விசாரணைக்கு தடை விதிக்கவில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா் ஆகியோா் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிட்டதையடுத்து பிற்பகலில் ஆஜராகினர். அப்போது, ”இந்த வழக்கு விசாரணையைத் தொடர தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றாா் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இந்த நிலையில், இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிப்பதா? அல்லது இரு நீதிபதிகள் விசாரிப்பதா? என்று முடிவெடுக்கும் வரை இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

summary

Judge G.R. Swaminathan Barred from Hearing Thiruparankundram Cases! — High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.