புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் 2,065 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
விழுப்புரத்தில் முதல்வா் பங்கேற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட 10 ஆயிரமாவது முகாமின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத் அலி, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.