முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் 198 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:05 PM
ஆலங்குடி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுக் கல்லூரியில் 198 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் விஜயா தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் உயரிய கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடக்கப் பள்ளிகள் முதல் உயா் கல்வி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். தமிழகம் முழுவதும் 41 அரசுக் கல்லூரிகளை தொடங்கியதுடன்.

அதற்கு பல கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியுள்ளாா். தற்போதைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வி முறையை அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கியுள்ளாா். அதை மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி கல்வி பயில வேண்டும் என்றாா்.

இதில், ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.