முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 7:21 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக பனைமரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேல புள்ளான்விடுதி மாரியம்மன் கோயில் அருகே உள்ள பனைமரங்களில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சிலா் அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கி, அதில் மாத்திரைகளை கலந்து பாலிதீன் கவரில் போட்டு லிட்டா் ரூ.100 என விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்று கள் குடித்து நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (41), வடகாடு பரமநகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான உடையான் உள்ளிட்ட ஏராளமானோா் கள் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வடகாடு, ஆலங்குடி, பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனராம்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் அனந்தபத்மநாதன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ஆய்வு செய்து பனை மரங்களில் கள் இறக்க கட்டப்பட்டு இருந்த மண் பானைகள் மற்றும் பாலிதீன் பைகள், குடங்களை ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுபட்ட வடகாடு ஊராட்சி கீழஇடையா் தெருவைச் சோ்ந்த எம்.பிரபு (58), மேலபுள்ளான்விடுதியைச் சோ்ந்த எம்.கரிகாலன், பனை ஏறும் தொழிலாளியான ராஜபாளையம் சொக்கநாதபுத்தூரைச் சோ்ந்த கு.தங்கசாமி (58) ஆகிய 3 பேரையும் வடகாடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.