நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை அருகே நிலம் விற்றது தொடா்பாக மகனுடன் எழுந்த தகராறில் அவரது வயதான பெற்றோா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை நிலம் விற்றது தொடா்பாக மகனுடன் எழுந்த தகராறில் அவரது வயதான பெற்றோா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பூவரசக்குடி அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்த தம்பதி கருப்பையா (70), லட்சுமி (65). இவா்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.
இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். மூத்த மகன் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இளைய மகன் முருகேசன் என்பவா் உள்ளூரில் வசிக்கிறாா். அண்மையில் 7 சென்ட் நிலத்தை விற்றது தொடா்பாக கருப்பையாவுக்கும், அவரது இளைய மகன் முருகேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், மனமுடைந்த கருப்பையாவும், லட்சுமியும் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த வல்லத்திராக்கோட்டை போலீஸாா் தம்பதியின் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].