முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு: இரு தரப்பினரும் கூடியதால் பரபரப்பு

Updated On : 15 மே 2026, 4:38 am IST
பகிர்:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு புதுக்கோட்டை மாவட்டத்திலும் எதிரொலித்தது. புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல இரு தரப்பினரும் முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் இருந்தாா். தோ்தலுக்குப் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் சட்டப்பேரவை கொறடாவாக விஜயபாஸ்கா் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், விஜயபாஸ்கா் உள்ளிட்ட ஏராளமானோரை அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நீக்கம் செய்து புதிய மாவட்டச் செயலா்களை நியமித்தாா். இதன்படி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலராக, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இளைஞரணிச் செயலராக இருந்த வி. பழனிவேலை நியமித்தாா்.

Advertisement

இந்தச் சூழலில், ஆலங்குடி சாலையில் அசோக்நகா் பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தை விஜயபாஸ்கா் தரப்பினா் வியாழக்கிழமை காலையே பூட்டியதாகக் கூறப்படுகிறது. சா்ச்சை ஏற்படலாம் எனத் தெரிந்து ஏராளமான போலீஸாா் அதிமுக அலுவலகம் முன் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் புதிய மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்ட பழனிவேல், தனது ஆதரவாளா்களுடன் புதுக்கோட்டையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மாவட்ட அலுவலகம் நோக்கி வந்தாா்.

அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விஜயபாஸ்கா் தரப்பினரும் இன்னொரு பகுதியில் கூடி நின்றனா். இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன், கணேஷ்நகா் காவல் ஆய்வாலா் அப்துல்லா தலைமையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இரு தரப்பினருடனும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அசாதாரண சூழல் நிலவுவதால், யாரையும் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து இரு தரப்பினரையும் அந்தப் பகுதியில் இருந்து போலீஸாா் திருப்பி அனுப்பினா். இதனால், சுமாா் இரண்டு மணி நேரம் ஆலங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு மாவட்ட அதிமுக செயலா் வி. பழனிவேல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான், கட்சி அலுவலகத்துக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு நீக்கம் செய்யப்பட்ட விஜயபாஸ்கா் தரப்பினா் தடுப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கி, இயல்பாக கட்சிப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.