பாபநாசம் வழியாக புதிய விரைவு ரயில் இயக்க வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி கும்பகோணம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளரும், தஞ்சாவூர் சரக ரயில்வே கமிட்டி உறுப்பினருமான டி.சரவணன் கூறியது:
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மன்னை விரைவு ரயிலை தொழில்நுட்ப காரணங்களை காட்டி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல்
நீடாமங்கலம்-திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விரைவு ரயில் பாபநாசம் வழித்தடத்தில் 7 ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. இதன் மூலம் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம்,திருவிடைமருதூர், வலங்கைமான்,
ஜயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மன்னை விரைவு ரயிலை நீடாமங்கலம், திருவாரூர்,மயிலாடுதுறை வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும் என்ற அறிவிப்பு இப்பகுதி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும்,
ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மன்னை விரைவு ரயிலுக்கு மாற்றாக அதே நேரத்தில் ஒரு புதிய விரைவு ரயிலை இயக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்,
கும்பகோணம் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், தொண்டு நிறுவனங்கள் இணைந்து டிசம்பர் 10-ஆம் தேதி கும்பகோணம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.