பயன்படுத்த முடியாத நிலையில் சக்கர நாற்காலிகள்: தஞ்சை பெரிய கோயிலில் மாற்றுத்திறனாளிகள் அவதி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்) சேதமடைந்து, பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளன. இதனால், சுற்றுலா வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அவதிக்குள்ளாகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்) சேதமடைந்து, பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளன. இதனால், சுற்றுலா வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அவதிக்குள்ளாகின்றனர்.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகவும், ஆலயமாகவும் விளங்குவதால், பெரிய கோயிலில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பறை, கோயிலுக்குள் சிரமமின்றி சென்றுவர சக்கர நாற்காலிகள் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த சக்கர நாற்காலிகள் போதிய பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மா. கனகராஜ் கூறியது:
பெரிய கோயில் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சக்கர நாற்காலிகளே உள்ளன. இவற்றின் முன்பகுதி உடைந்து, பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளன. இதனால், மாற்றுத்திறனாளிகள், நடக்க சிரமப்படும் முதியோர் கோயிலைச் சுற்றிப்பார்க்கவோ, சுவாமி தரிசனத்துக்கு செல்லவோ இயலவில்லை. 4-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் கிடைப்பதில்லை.
இதேபோல், நந்தி மண்டபம், அம்பாள் மண்டபம், சுவாமி மண்டபத்துக்குச் செல்ல சாய்வு தளங்கள் அமைக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புச் சட்டம் 2016, ஷரத்து 8-ன் படி, அரசு கட்டடங்கள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உலக பாரம்பரியச் சின்னமாக உள்ள தஞ்சை பெரிய கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனை இந்திய தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் தொல்லியல் ஆய்வுத்துறை பராமரிப்பு அலுவலர் பி. சந்திரசேகரன் கூறியது:
கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக புதிய சக்கர நாற்காலிகள், குறிப்பிட்ட இடங்களில் மரத்தினாலான சாய்வு தளங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், விரைவில் குறைபாடுகள் களையப்படும் என்றார்.