மலேசியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர்களிடமிருந்து தப்பி காப்பகத்தில் தஞ்சமடைந்துள்ள தனது மகளை மீட்டு, தாயகத்துக்கு அழைத்து வர வலியுறுத்தி ஆட்சியரிடம் பெண் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணி மாநிலச் செயலரும், வழக்குரைஞருமான சபியா, வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் நிஜாமுதீன், அதிராம்பட்டினம் நகரத் தலைவர் அசார் ஆகியோருடன் மதுக்கூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:விதவையான எனது மகள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், என் மகளுக்கு பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் அறிமுகமானார். மலேசியாவில் எனது தாய் உள்ளார். அவர் மூலம் மலேசியாவில் உள்ள ஹோட்டலில் காய்கறி வெட்டும் வேலைக்கு அனுப்புவதாகவும், மாதம் ரூ. 30,000 ஊதியம் கிடைக்கும் எனவும் கூறினார். இதை நம்பி எனது மகளும் மலேசியாவுக்கு நவ. 23-ம் தேதி சென்றார்.
மூன்று நாட்கள் கழித்து தொலைபேசி மூலம் எனது மகள் பேசினார். அப்போது, தன்னை பாலியல் தொழில் நடைபெறும் விடுதியில் விற்றதாகவும், அங்கிருந்து தப்பி வேறொரு அமைப்பில் தஞ்சமடைந்ததாகவும் அழுதவாறு கூறினார். தொடர்ந்து எனது மகளை பாலியல் தொழில் நடத்தும் கும்பல் துரத்துவதால், அவர் மலேசியாவில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, எனது மகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை தாயகத்துக்கு அழைத்து வர வேண்டும். மேலும், அவரை இங்கிருந்து அனுப்பி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.