தஞ்சாவூர் அருகே மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள தென்பாதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ராஜ விக்னேஷ் (22). இவர் தஞ்சாவூரில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது மோட்டார் சைக்கிள் திருச்சியில் உள்ள பழுதுபார்ப்பு கடையில் பழுதுபார்க்கப்பட்டது. இதை எடுத்து வருவதற்காக ராஜ விக்னேஷ் தனது நண்பரான சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் சீர்காழி அருகேயுள்ள இனாம்குளத்தலப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் பாலமுருகனுடன் (22) திருச்சிக்கு புதன்கிழமை சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நள்ளிரவு 12.45 மணியளவில் தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தனர்.
வல்லம் அருகே முன்னையம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற மினி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜவிக்னேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.