தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படவுள்ள இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தகுதியான இளைஞர்கள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஆக. 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்
(புதுச்சேரி) மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இம்முகாமில் படைவீரர் தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், எழுத்தர், வைப்பகப் பாதுகாப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.