இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
பாபநாசம் அருகேயுள்ள திருவையாத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (55). இவர் தனது மனைவியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 2015, மே 22-ம் தேதி பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கரம்பத்தூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு நகரப் பேருந்து நின்றபோது, அதை வீரமணி கடந்து கொண்டு செல்ல முயன்றார். அப்போது, இவர்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த பத்மா கீழே விழந்தார். அப்போது, நகரப் பேருந்தும் புறப்பட்டதால் பின் சக்கரத்தில் பத்மா சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக இழப்பீடு கோரி தஞ்சாவூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் வீரமணி வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், ரூ. 6.90 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்துக்கு ஆணையிட்டார்.
ஆனால், இழப்பீடு வழங்கப்படாததால், அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை வீரமணி தாக்கல் செய்தார். இதன்பேரில், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி வியாழக்கிழமை ஆணையிட்டார். இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்தில் நின்ற தஞ்சாவூர் - கும்பகோணம் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஆணை நிறைவேற்றுநர் மோகன் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு வந்தார்.