தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே காதலர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவையாறு அருகேயுள்ள வைத்தியநாதன்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த உதயகுமார் மகள் ஆர்த்தி (19). இவரும், அதே கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் உத்தமனும் (25) இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், வைத்தியநாதன்பேட்டை கொள்ளிடக் கரையில் உள்ள தேக்கு மரத் தோப்பில் ஆர்த்தியும், உத்தமனும் சனிக்கிழமை காலை தூக்கிட்ட நிலையில் தொங்கினர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் மருவூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு சடலங்களையும் கைப்பற்றினர். மேலும், இருவரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.