தஞ்சாவூரில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவக் கழக தஞ்சாவூர் கிளை மற்றும் இதர அமைப்புகள் சார்பில் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவக் கழக தஞ்சாவூர் கிளை மற்றும் இதர அமைப்புகள் சார்பில் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகள், ஆரம்ப நிலையில் கண்டறிந்து புற்றுநோயை வெல்வோம், புற்றுநோய் வராமல் காப்போம், விழிப்புணர்வுடன் செயல்படுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இடையே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி காந்திஜி சாலை வழியாகச் சென்று ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, பேரணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் இந்திய மருத்துவக் கழக தஞ்சாவூர் கிளையின் தலைவர் டாக்டர் எஸ். மாரிமுத்து, செயலாளர் அமிர்தகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மருத்துவர்கள் வரதராஜன், மோகன்தாஸ், பிரதீபா, உஷாதேவி, சத்தியபாமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.