ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஜூலை இறுதிக்குள் நடத்த வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஜூலை மாத இறுதிக்குள் நடத்திட வேண்டும் என தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஜூலை மாத இறுதிக்குள் நடத்திட வேண்டும் என தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கோ. பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அற்புதநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
கடந்த 2017 - 18 மற்றும் 2018 - 19 ஆம் ஆண்டுகளுக்கான பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள வேலூர், விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களுக்கு விரைந்து பதவி உயர்வு வழங்க வேண்டும். இதுவரை நடத்தப்படாமல் உள்ள 2018 - 19 ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை இம்மாத இறுதிக்குள் நடத்திட வேண்டும். இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணிமாறுதல்களை நடத்துதல் மற்றும் அதிகாரங்களை மாவட்ட ஆதிதிராடர் நல அலுவலரிடம் அளிக்க வேண்டும். நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத குறைபாட்டை போக்க, உடனடியாக தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்வித்துறையில் வழங்குவதுபோல, நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கடந்த 1986, 1988 மற்றும் 1997 முதல் 2002 வரை பட்டதாரி நிலையில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிவரன் முறை செய்திட வேண்டும். இதுவரை தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ள விடுதிப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிவரன் முறை செய்திட வேண்டும். நலத்துறை விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். விடுதிகள் மற்றும் பள்ளிகள், சுகாதாரம், பாதுகாப்பு கருதி துப்புரவு பணியிடங்கள் ஏற்படுத்திட வேண்டும்.கடந்த 1986 முதல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கலை, ஓவியம், விளையாட்டு ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கு புதிதாக அலுவலகப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில சங்க ஆலோசகர்கள் மனோகரன், கோவிந்தராஜூலு, தஞ்சை மாவட்டத் தலைவர் பாலையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் தஞ்சை மாவட்டச் செயலர் வீரமணி நன்றி கூறினார்.