தஞ்சாவூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் புதை சாக்கடை விஷ வாயு தாக்கி தஞ்சை தொழிலாளி இறந்த சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம்
விழுப்புரத்தில் புதை சாக்கடை விஷ வாயு தாக்கி தஞ்சை தொழிலாளி இறந்த சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் சிஐடியு அமைப்பினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரத்தில் எந்தவித உயிர் காக்கும் உபகரணங்களும் இல்லாமல் புதை சாக்கடையில் வேலை செய்த தஞ்தை தொழிலாளி பாஸ்கரன் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் புதை சாக்கடை சுத்தம் செய்யும் பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதால் தொழிலாளர்கள் தொடர்ந்து விஷ வாயு தாக்கி இறக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒப்பந்ததாரரையும் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் க. அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் பி.என். பேர்நீதி ஆழ்வார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் அருளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்த்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.