மண்புழு உரத்தின் நன்மைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்
விவசாயிகள் மண்புழு உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மண்புழு உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திகுறிப்பு:
அதிக மகசூலைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் அளவுக்கதிகமான ரசாயன உரங்களை நிலத்தில் இடுவதால் பல்வேறு விதமான பெளதீக, ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. மண்ணின் தரம் கெடுகிறது. இந்தக் குறையைப் போக்கிட நிலத்தில் மண்புழு உரமிடுவது அவசியம்.
மற்றெந்த இயற்கை உரங்களிலும் இல்லாத அளவுக்கு பேரூட்டங்களும், நுண்ணூட்டங்களும் மண்புழு உரத்தில் மலிந்து கிடக்கின்றன. நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறைத்து மண்ணின் குணங்களை மாற்றி இயற்கையான சத்துகளை சேர்த்து மகசூலை அதிகரிப்பதுடன் விளைபொருட்களின் சுவை, தரம், எடை முதலியவற்றையும் அதிகரிக்கச் செய்கிறது.
மண்புழு உரத்தில் தழைச்சத்து -1.60 சதம், மணிச்சத்து - 0.57 சதம், சாம்பல் சத்து - 1.04 சதம், கந்தகம் - 0.38 சதம், மெக்னீசியம் - 0.37 சதம், சுண்ணாம்பு - 0.35 சதம் மற்றும் துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு தாமிரம், போரான், மாலிப்டினம் ஆகிய சத்துகளும் நிறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக ஏக்கருக்கு தொழுவுரம் 5 டன் இடவேண்டிய நிலையில் மண்புழு உரமாக இருப்பின் 2 டன் மட்டுமே இட்டால் போதும்.
மண்புழு உரமிடும்போது ரசாயன உரம் இடும் அளவை 30 சதம் வரை குறைத்துக் கொள்ளலாம். ரசாயனங்களால் ஏற்படும் தீமை குறைகிறது. தண்ணீரை ஈர்த்து தக்கவைத்துக் கொள்ளும் திறன் அதிகரிப்பதால் 50 சதம் வரை தண்ணீர் பாய்ச்சுவதை குறைத்துக் கொள்ளலாம். தாவரங்களின் வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கிறது. நீர்வடியும் தன்மை அதிகரிப்பதால் மழை, வெள்ள காலங்களில் மண் அரிமானத்தைத் தடுக்கிறது. நிலத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்திறனை அதிகரித்து விரைவான இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது.
30 முதல் 120 சதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. தானியங்கள், காய்கறிகள், பழவகைகளின் நிறம், சுவை, தரம் மேன்மையடைகிறது.
எனவே விவசாயிகள் மண்புழு உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.