மாநகராட்சி ஆணையரை தாக்க முயற்சி: தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி கைது
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை தாக்க முற்பட்டதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை தாக்க முற்பட்டதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) பி. காளிமுத்துவிடம் தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலர் ஆர். கரிகால்சோழன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பாகத் தகவல் தரக் கோரினாராம். அதற்கு ஆணையர் கோப்பினை பார்வையிட்டு, உரிய பதில் கடிதம் மூலம் அனுப்பப்படும் எனக் கூறினாராம். அப்போது, ஒரு மணிநேரத்தில் தகவல் தர வேண்டும் என கரிகால்சோழன் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆணையரை பணி செய்ய விடாமல், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்க முற்பட்டதாகக் கூறி கரிகால்சோழன் மீது மேற்குக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டது.
இதனிடையே, கரிகால்சோழனைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகம் முன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து கரிகால்சோழனை புதன்கிழமை கைது செய்தனர்.