குதிரையின் கண்ணிலிருந்த புழு அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கம்
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குதிரையின் கண்ணில் இருந்து புழு அறுவைச் சிகிச்சை மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டது
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குதிரையின் கண்ணில் இருந்து புழு அறுவைச் சிகிச்சை மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பால் வியாபாரி ஜெகதீஷ். இவர் இரண்டு பந்தயக் குதிரைகளை வளர்த்து வருகிறார். இதில் மூன்று வயதாகும் ஒரு குதிரைக்கு இடது கண் கருவிழித் திரை கடந்த மூன்று நாள்களாக பாதிக்கப்பட்டு, குதிரையின் பார்வைத்திறன் குறைந்ததாம். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த குதிரையை கடந்த சனிக்கிழமை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
குதிரையின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணில் புழு இருப்பதை உறுதி செய்து, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) ப.மோகன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர் ஆ.பழனிச்சாமி, ச.செந்தில்குமார், ப.தமிழ்மகன், ம.சரவணன், தா.அருள்குமார், க.கண்ணன் மற்றும் பி.கே.இராம்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர், குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து கண்ணில் துளையிட்டு புழுவை அகற்றினர்.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தகுந்த காலத்தில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) ப.மோகன் தெரிவித்தார்.