கும்பகோணத்தில் பூட்டிக் கிடந்த இரு வீடுகளில் கதவுகளை உடைத்து 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் இளங்கோ நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் என். சையதுஅன்வர் (48). இவர் மலேசிய நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லைலாபானு பள்ளியில் படித்து வரும் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்காக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், லைலா பானு தனது இரு மகன்களுடன் வீட்டைப் பூட்டிவிட்டு, நவ. 5-ம் தேதி திருச்சியிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்த தகவல் கிடைத்து லைலா பானு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த அவர் பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகைகள், ரூ. 20,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மனைவி கலையரசி (53). இவர் புள்ளபூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டைப் பூட்டி விட்டு, மயிலாடுதுறையில் உறவினர்களுடன் வசித்து வருகிறார். இவர் மாதத்துக்கு இரு முறை வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நவ. 4-ம் தேதி இவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தது. தகவலறிந்த கலையரசி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 15 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.இரு சம்பவங்கள் குறித்தும் கும்பகோணம் மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.