தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என அப்பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. தொடக்கம் முதல் இன்று வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் முறையான அனுமதி பெற்று தொலைநிலைக் கல்விப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் 2017 விதிகளின் அடிப்படையில், தமிழகத்தில் இதுவரை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை தொலைநிலைக் கல்விப் பாடப் பிரிவுகளை நடத்த அங்கீரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பாடங்களை நடத்துவற்கு 2018-19 மற்றும் 2019-20 கல்வி ஆண்டுகளுக்கு அனுமதியைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியபோது, தேசியத் தரநிர்ணயக் குழுவின் அங்கீகாரத்தில் 3.26 புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே தொடர்ந்து 2018-19, 2019-20 ஆம் ஆண்டுகளில் நடத்த முடியும் என்ற நிபந்தனை எதையும் விதிக்கவில்லை.
எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்படுகிறது.