போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த விளக்க வாயில் கூட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியூ பொது செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். தொமுச பொருளாளர் நெடுஞ்செழியன், ஏஐடியூசி துணை தலைவர் அழகிரி, ஐஎன்டியூசி பொதுசெயலாளர் மாரியப்பன், சிஐடியூ தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணியாளர் சங்க பொதுசெயலாளர் குமார் வரவேற்றார்.
இதில், போக்குவரத்து கழகங்களில் நிலவும் வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து நிர்வாகம் செலவு செய்த ரூ. 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வு பலன்களையும், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும், 13ஆவது ஊதிய குழுவின் ஒப்பந்தப்படி, ஒப்பந்த பலன்களை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு டீசல் சிக்கன நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும், பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளை தடத்தில் இயக்க வேண்டும், நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில், தொமுச பேரவை பொது செயலாளர் பாண்டியன், சிஐடியூ மாநில துணை தலைவர் கண்ணன், ஏஐடியூசி பொது செயலாளர் மதிவாணன், ஐஎன்டியூசி துணைத் தலைவர் வைத்தியநாதன், ஐஎன்டியூசி(டிஎம்சி) கலியன், எச்எம்எஸ் முருகேசன், ஏஏஎல்எல்ஏப் காளிமுத்து, எம்எல்எப் பாலு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில், கும்பகோணம், நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் சிஐடியூ திருநாவுக்கரசு நன்றி கூறினார்.