பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி: 1,000 மாணவர்கள் பங்கேற்பு
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இப்போட்டியை புதுச்சேரி காரைக்கால் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆர். ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திலிருந்து 1000-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 2,000-ம் வழங்கப்பட்டது. மேலும், தலா 5 பேருக்கு ரூ. 1,500 வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் பள்ளி, கல்லூரியில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
திமுக வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் உத்திராபதி வரவேற்றார். கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.