பெட்ரோல், டீசலை 75 சதவீத மானிய விலையில் வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை டீசல் கேன்களுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் சுந்தர. விமலநாதன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் டீசல் கேனை வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு வரலாறு காணாத அளவுக்கு டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை நாள்தோறும் உயர்த்தி கொண்டிருப்பதால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் தண்ணீர் இறைப்பது, உழவு, நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் தங்களது வரிகளை குறித்து, விவசாயம் பாதிக்காமல் இருக்கவும், உணவு உற்பத்தி குறையாமலிருக்கவும் அனைத்து விவசாயிகளுக்கும் 75 சதவீதம் மானியத்தில் பெட்ரோல், டீசலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, உதவி ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் விவசாயிகள் வழங்கினர்.