பட்டுக்கோட்டை: தினமணியில் வெளியான செய்தியால் பட்டுக்கோட்டை நகரின் பிரதான சாலையில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வேகத்தடை திங்கள்கிழமை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை நகரில் அறந்தாங்கி சாலை முக்கத்தில் சாலையின் குறுக்கே 2 பிரிவுகளாக வேகத்தடை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அண்மையில் தொடங்கியது. சில நாள்கள் மட்டுமே பணி நடைபெற்ற நிலையில், எஞ்சிய பணி நிறுத்தப்பட்டது. வேகத்தடை அமைக்கப்படும் இப்பகுதி தஞ்சை, காரைக்குடி, பேராவூரணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் மிக பிரதான சாலையாகும். இங்கு வேகத்தடை அமைக்கும் பணிகள் நிறைவடையாததால், தினமும் இவ்வழியாகச் செல்லும் ஏராளமான பேருந்துகள், லாரி, ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 17) வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வேகத்தடையை திங்கள்கிழமை முழுமையாக கட்டி முடித்தனர். இதனால் இச்சாலையை பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தங்கள் சிரமம் நீங்கியதற்காக மகிழ்ச்சி தெரிவித்தனர்.