பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அளவு குறைந்தால் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றார் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் த. தர்மசீலன்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் தெரிவித்தது:
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் அளவு குறைவின்றி பெட்ரோல், டீசல் விநியோகம் செய்ய வேண்டும். அளவு குறைவு காணப்பட்டால் தொடர்புடைய பம்பினை நிறுத்தம் செய்து, விற்பனை தடை செய்ய நேரிடும். எடையளவு பயன்படுத்தும் மளிகை, காய்கறி, பழம், இரும்பு, மீன், கறி உள்ளிட்ட வியாபாரிகளும் தாங்கள் பயன்படுத்தும் மின்னணு தராசு, மேஜை தராசு, விட்டத் தராசு, எடைக்கற்கள், அளவைகள் உரிய காலத்தில் அதாவது தராசுக்கு ஏற்றவாறு ஓராண்டோ, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ முத்திரையிட்டு, வியாபாரத்துக்குப் பயன்படுத்த வேண்டும். தவறினால், உதவி ஆய்வர்கள் ஆய்வின்போது முரண்பாடு காணப்பட்டால், பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்சம் ரூ. 5,000 அபராதம் விதிக்க நேரிடும் என்றார் அவர்.
மேலும், தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இர. கவிஅரசு தலைமையில் காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பொட்டலப் பொருட்கள் விதிகள் அனுசரிக்கப்படாத 9 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ. 45,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், மேலும் உரிய காலத்தில் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், போலி எடைக்கற்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் கவிஅரசு தெரிவித்தார்.