தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் டீ விற்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூரைச் சேர்ந்தவர் முத்தையா மகன் மணிவண்ணன் (38). இவர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டீ, வடை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு இவர் நடைமேடையிலிருந்து ஜன்னல் வழியாக டீ கொடுத்தார். காசு வாங்குவதற்குள் ரயில் புறப்பட்டது. எனவே, ஓடிச் சென்று காசை வாங்க முற்பட்ட மணிவண்ணன் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையிலுள்ள இடைவெளி வழியாக ஓடும் ரயிலில் சிக்கிக் கொண்டார். இதில், பலத்தக் காயமடைந்த இவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.