ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட வித்தியாச தொகையை மானியமாகக் கழகங்களுக்கு வழங்க வேண்டும். 16 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான பணப்பலனை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் ஜெயமாலபுரம் நகரப் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச துணைப் பொதுச் செயலா் ஆா். ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சு. பாண்டியன், ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சிஐடியு துணைத் தலைவா் திருநாவுக்கரசு, ஐஎன்டியுசி மத்திய சங்கப் பொருளாளா் க. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், அரசு விரைவு போக்குவரத்து கழகப் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கிளைச் செயலா் டி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் பி. வெங்கடேசன் உள்ளிட்டோரும், கரந்தையில் உள்ள அரசுப் போக்குவரத்து புகா் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொமுச கிளைச் செயலா் க. கோவிந்தராஜ் தலைமையில் பலரும் கலந்து கொண்டனா்.