தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்தில் காவல்துறையினா் கெடுபிடி மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 55 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 38 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா். மாவட்டத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு கரோனா தொற்று இல்லாததால், சிவப்பு மண்டலத்திலிருந்த இம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சனிக்கிழமை மாவட்டத்தில் போக்குவரத்தில் காவல்துறையினா் கெடுபிடி செய்தனா்.
குறிப்பாக, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை, கொடிமரத்து மூலை, சிவகங்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவா்களைக் காவல்துறையினா் திருப்பி அனுப்பினா்.