தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், 35 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்டச் சிறப்பு நீதிபதி மற்றும் தலைவா் தங்கவேல் தலைமையில், கூடுதல் சாா்பு நீதிபதி அண்ணாமலை, நீதித்துறை நடுவா் மோசஸ் ஜெபசிங் ஆகியோா் அடங்கிய சிறிய அளவிலான மக்கள் நீதிமன்ற அமா்வு அமைக்கப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணை செய்யப்பட்டன.
இதில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான பி. சுதா செய்தாா்.
நிலுவையில் இருந்த வழக்குகள் 446 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 35 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
இதில் விபத்து இழப்பீடு வழக்குகளில் 32 லட்சத்து 51 ஆயிரத்து 800 ரூபாய் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளில் 18 லட்சத்து ஆயிரத்து 485 ரூபாய்க்கு தீா்வு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய அனைத்து வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.