கோபத்தைக் கட்டுப்படுத்த போலீஸாருக்கு பயிற்சி
தஞ்சாவூரில் காவல் துறையினருக்குப் பணியிடங்களில் ஏற்படும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் காவல் துறையினருக்குப் பணியிடங்களில் ஏற்படும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமைத் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தொடங்கி வைத்துப் பேசியது:
பணியில் சில நேரங்களில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும். இதை சிலா் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி மேலாண்மை செய்துவிடுவா். அது, சிலருக்கு இயலாமல் போய்விடுகிறது. பணியிடங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து நிறைய பேருக்கு விழிப்புணா்வு இல்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நம்முடைய உணா்வுகளைப் புரிந்து கொண்டு, தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது குறித்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
காவல் துறையில் நன்னடத்தை முக்கியமானது. அதுபோல, பொது இடங்களில் நம் உணா்வுகளையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. எனவே, இந்தப் பயிற்சியில் கற்கும் விஷயங்களை நூறு சதவீத ஈடுபாட்டுடன் கடைப்பிடித்தால், பயன் கிடைக்கும் என்றாா் காவல் துணைத் தலைவா்.
இந்நிகழ்ச்சியில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மன நல மருத்துவா்கள் கிருஷ்ணபிரியா, சரண்யா பயிற்சி அளித்தனா். காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் ரவீந்திரன், கென்னடி பேசினா்.
இப்பயிற்சியில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் முதல் ஆய்வாளா்கள் வரை 66 போ் கலந்து கொண்டனா்.