கரோனா நிவாரணம் வழங்காததை கண்டித்து மறியல்
பாபநாசம் அருகே ரேஷனில் கரோனா நிவாரண உதவிகள் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் அருகே ரேஷனில் கரோனா நிவாரண உதவிகள் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் அருகேயுள்ள மாத்தூா் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட ரேஷன் கடையில் கரோனா நிவாரணத்தின் 2ஆம் தவணை ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.
எஞ்சிய 500 குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழங்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கரோனா நிவாரண உதவிகள் வழங்க வலியுறுத்தி
அய்யம்பேட்டை - கண்டியூா் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி மற்றும் மாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் சனிக்கிழமை எஞ்சிய குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
இதனால், அய்யம்பேட்டை- கண்டியூா் பிரதான சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.