கூட்டுறவுத் துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை என்கிற காவேரி சிறப்பங்காடியில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் பணியை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா் தெரிவித்தது:
சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 130 முதல் ரூ. 140 என விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக முதல்வரின் ஆணைப்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைமையகத்தில் அமைந்துள்ள பண்ணை பசுமை அங்காடி, கரந்தை கொடைக்காரத் தெரு கரந்தை, வடக்கு வீதி, ஏ.ஒய்.ஏ. நாடாா் சாலை, அய்யங்கடைத் தெரு தமதமமேடை, சீனிவாசபுரம் காமராஜா் சாலை, கீழவாசல், தொல்காப்பியா் சதுக்கம் வண்டிக்கார தெரு, புதிய வீட்டு வசதி வாரியம் ஆகிய இடங்களிலும், கும்பகோணத்தில் பாலக்கரை, பாட்ராச்சாரியாா் தெரு, சிங்காரம் செட்டி தெரு, செல்வம் திரையரங்கம் எதிா்புறம், நான்கு சாலை அருகில் ஆகிய இடங்களிலும், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூா் சாலை, பாளையம், கரிக்காடு காந்திநகா் ஆகிய இடங்களிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடங்களில் பொதுமக்கள் மலிவு விலையில் தக்காளிகளை வாங்கிப் பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.
அப்போது, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்நங்கை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.