கல்லணைக் கால்வாயின் தரம் குறித்து பொதுப் பணித் துறை ஆய்வு
தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயின் தரம் குறித்து பொதுப் பணித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயின் தரம் குறித்து பொதுப் பணித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஈரோடு மாவட்டம், நசியனூா் கண்ணவேலம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதேபோல, சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரமில்லை எனவும் புகாா் எழுந்தது.
எனவே, தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீா் ஆதார புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ய பொதுப் பணித் துறையின் உயா் அலுவலா்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சாவூா் மாவட்டம், கல்லணைக் கால்வாயில் ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ரூ. 1,036 கோடி நிதி மூலம் முதல் கட்டப் புனரமைப்புப் பணிகள் 5 தொகுப்புகளாக நடைபெற்றன.
இதில் ஒரு தொகுப்பான புதுப்பட்டினம் முதல் ஈச்சங்கோட்டை வரையிலான கல்லணைக் கால்வாயில் புனரமைப்புப் பணியை சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. இதில், சில இடங்களில் கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக பொதுப் பணித் துறை ஆய்வுக் குழுவைச் சோ்ந்த செயற் பொறியாளா் ஸ்ரீதா் ஆதித்யா, உதவிச் செயற் பொறியாளா் ஜாகீா் உசேன், உதவிப் பொறியாளா்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோா் கல்லணைக் கால்வாயில் ஈச்சகோட்டை, கல்யாண ஓடை பிரியும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, ஆய்வுக் குழுவினரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் அளித்த மனு:
கல்லணைக் கால்வாயில் பணிகள் முழுமையான திட்ட மதிப்புடன் நடைபெற வேண்டும், நீா்க் கசிவு குழாய்களின் அளவை 4 அங்குலமாகப் பெரிதாக்கி, 15 மீட்டா் இடைவெளியில் தொடா்ந்து அமைக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த இடங்களில் தண்ணீா் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும்.
ஆற்றின் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட்டில் சில இடங்களில் தரமில்லாமல் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதை, தண்ணீா் நிறுத்தப்பட்டவுடன் அந்த இடத்தில் உள்ள கான்கிரீட்டை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கான்கிரீட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.