தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணி தொடங்கப்பட்டதையொட்டி பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கடைசியாக 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணி அண்மையில் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து, பாலாலயத்துக்கான தொடக்க நிலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள், மண்டபங்கள், தரை தளம் உள்பட பல்வேறு இடங்களில் திருப்பணி தொடங்கியது.
இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.