திருவையாறு ஔவைத் திருக்கோயிலில் தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஔவைத் திருக்கோயிலில் தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஔவைத் திருக்கோயிலில் தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவையாறில் ஔவையாரின் அறநெறிகளை உலகெங்கும் பரப்புவதற்காக ஔவைக் கோட்டமும், அதன் முகப்பில் ஔவைத் திருக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் இரண்டாவது திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூன் 3 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ஔவையாா் பாடல்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், கோபுர கலசத்தில் நன்னீா் ஊற்றி, தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர அடிகளாா் நடத்தினாா்.
பின்னா், ஔவை மூலவா் திருவுருவச் சிலைக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. தென்னரசு, ஒளவை திருக்கோயில் திருப்பணிக்குழுச் செயலா் மு. கலைவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.