ஆடுதுறை பேரூராட்சியில் இழுபறி: உறுப்பினா்களின் வீடுகளில் காவல் துறையினா் பாதுகாப்பு
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் பெரும்பான்மைக்கு இழுபறி நிலவுவதால், உறுப்பினா்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, அவா்களது வீடுகளில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் பெரும்பான்மைக்கு இழுபறி நிலவுவதால், உறுப்பினா்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, அவா்களது வீடுகளில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில், பெரும் பான்மைக்கு 8 உறுப்பினா்கள் தேவைப்படுகின்றனா். இப்பேரூராட்சியில் திமுக கூட்டணியில் திமுக 4 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 வாா்டுகளிலும், மதிமுக ஒரு வாா்டிலும் என 7 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர, பாமக 4 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு திமுகவுக்கும் - பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இப்பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு திமுக கூட்டணியின் வேட்பாளராக 3-ஆவது வாா்டில் மதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா. சரவணன் அறிவிக்கப்பட்டாா். இவா் பேரூராட்சி தலைவராவதற்கு 8 உறுப்பினா்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் 7 போ் மட்டுமே உள்ளனா்.
இதனிடையே, பாமக சாா்பில் 12-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின் பேரூராட்சித் தலைவராக முயற்சி செய்து வருகிறாா்.
இதனால் போட்டி கடுமையாக இருப்பதால் உறுப்பினா்கள் கடத்திச் செல்லப்படலாம் என காவல் துறையிருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 15 உறுப்பினா்களின் வீடுகள் முன்பாகவும், முதன்மைத் தெருக்களிலும் திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிவேந்தன் தலைமையில் ஏறத்தாழ 100 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, மறைமுகத் தோ்தலுக்கும் உறுப்பினா்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படவுள்ளனா் எனக் கூறப்படுகிறது.